இலையில் தங்கிய துளிகள்
காலப்பெருவெளியில்.
சில பத்தாண்டு கரைந்து கழிந்தபின்
மீண்டும் கண்டு செல்ல வருகிறேன்.
உன் காதல் திருமுகம்...
அவ்வண்ணமே பொழியுமா?
பூ மலிந்த பொன்முகம்
உன் கிராமம் நெருங்க நெருங்க
மார்பு கூட்டில் உயிர் வேகுதடி.
நகரா மரங்கள் நகர்வதாகவும்...
நகரும் வாகனம் நிலை கொண்டதாகவும்...
நீளப்பொய் சொல்கிறது நெடுஞ்சாலை.
கலாபம் கட்டி ஆடுகின்றன நிறைவேறாத கனவுகள்.
பட்டு பாவாடையின் காற்றடிப்போடு
பணிவில் திமிர்காட்டும் பார்வைகளோடு
முலைக்கும் முலையா முன் மலர்களை சண்டையிட்டு
முட்டும் சடை ஒதுக்கி சலங்கைகட்டிய மான்குட்டியாய்
தரைதோயாத கலர் மேகமாய்
வீதி மரங்களின் பூக்கள் திறந்து
ஒட்டு மொத்த நாணத்தை உருண்டைதிரட்டி
என் மேல் எறிந்து நீ என்னை கடந்த காலம்
மனசெல்லாம் மார்கழிதான்...
தெருவெல்லாம் கார்த்திகைதான்...
ஏழோ எட்டோ இருக்குமா? பழகி வந்த ஆண்டுகளும்
பகிர்ந்து கொண்ட வார்த்தைகளும்.
இன்றேனும் பேசு பெண்ணே...
வாங்க!
ஆண்டுகள் தோண்டிய அதேகுரல்.
அனால் நீ மட்டும் நீயில்லை...
வீதியெல்லாம் வர்ணங்களை விசிறியடித்த அவள் எங்கே?
மழை ஊறிய ஓவியமாய் சாயம் போன நீ எங்கே?
காலம் தன்சவுக்கை பூக்கள் மீது சொடுக்காமல் இருக்கலாம்.
மீண்டும் வார்த்தைகள் தொலைத்த மொழிகளாய் நீயும் நானும்.
பூச்சரமிட்ட புகைப்படம் சொல்லியது உன் அம்மாவின் மரணம்.
சரத்தின் சருகு சொல்லியது உன் பொருளாதாரம்.
புகைப்படத்திலும் சிரிக்க தெரியாத பாவமாய் உன் இரு பிள்ளைகள்.
தேநீர் தந்தாய்...
பட்டுவிடக்கூடாது என்ற உன் அச்சத்திலும்
தொட்டுவிட கூடாது என்ற உன் நடுக்கத்திலும்
சிக்கிய கோப்பை சிறிதே தள்ளாடியது...
வெள்ளையடிகாத சுவரில் பல்லி பார்த்து பழங்கதை பேசி
ஓரக்கண்னால் உயிர் தடவி
இனிமேலும் இங்கிருப்பின்
கண்ணீரோடு உண்மைகளும் கொட்டிவிடும் என்றஞ்சி
கும்பிட்டு வெளியேறி கடைசி விடைசொல்ல
சன்னல் கம்பிகளில் உன் கண்கள் தேடிய போது
கார் கதவு சாத்தவந்த கணவன் சொன்னான்.
நீங்களே அவளுக்கு தாலி கட்டி இருக்கலாம்.
உன் போல் பெண் மக்கள் ஊர் உலகில் எத்தனையோ
காதலுற்ற சேதியினை காதலனுக்கு சொல்லாமல்
கணவருக்கு சொன்னவர்கள்...

இலக்கியனே,
ReplyDeleteஇளமை காலத்தை இவ்வளவு இனிமையாக சொன்ன இலக்கியனை எனக்கும் பிடித்திருக்கிறது. கடைசி இரு வரிகளில் என்னையும் திரும்பவைத்து விட்டாய்.
SO SWEET...
I like this feel.....very nice.
ReplyDeletealagaanaaa valigail... arumaiyaana varigal....
ReplyDeletealagaanaa valigal... arumaiyaana varigal....
ReplyDelete