காதலித்துப்பார்
உன்னை சுற்றி ஒளிவட்டம் தோன்றும்
உலகம் அர்த்தப்படும்
ராத்திரியின் நீளம் விளங்கும்
உனக்கும் கவிதை வரும்
காதலித்துப்பார்...
கையெழுத்து அழகாகும்
தபால்காரன் தெய்வமாவான்
உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்
கண்ணிரெண்டும் ஒளி கொள்ளும்
காதலித்துப்பார்...
தலையணையை நனைப்பாய்
மூன்றுமுறை பல் துலக்குவாய்
காத்திருந்தால் நிமிஷங்கள் வருஷமென்பாய்
வந்துவிட்டால் வருஷங்கள் நிமிஷமென்பாய்
காக்கைகூட உன்னை கவனிக்காது.ஆனால்
இந்த உலகமே உன்னையே கவனிப்பதாய் உணர்வாய்
வயிற்றிற்கும் தொண்டைக்குமாய் உருண்டை
ஓன்று உருள காண்பாய்
இந்த வானம் இந்த அந்தி இந்த பூமி இந்த பூக்கள் எல்லாம்
காதலை கவுர வைக்கும் ஏற்பாடுகள் என்பாய்
காதலித்துப்பார்...
இருதயம் அடிக்கடி இடம் மாறி துடிக்கும்
நிசப்த அலை வரிசைகளில்
உனது குரல் மட்டுமே ஒலிபரப்பாகும்
உன் நரம்பே நாண் ஏற்றி உனக்குள்ளே அம்புவிடும்
காதலின் திரைசீலையை காமம்கிழிக்கும்
ஹார்மோன்கள் நைல் நதியாய் பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும் சகராவாகும்
தாகங்கள் சமுத்திரமாகும்
பின் கண்ணீர் துளிக்குள் சமுத்திரம் அடங்கும்
காதலித்துப்பார்...
பூக்களில் மோதி மோதியே உடைந்து போக
உன்னால் உண்ணுமா?
அகிம்சையில் இம்சையை அடைந்ததுண்டா?
அழுகின்ற சுகம் அறிந்ததுண்டா?
உன்னையே உனக்குள்ளே புதைக்க தெரியுமா?
சபையில் தனிமையாகவும்
தனிமையை சபையாக்கவும்
உன்னால் உண்ணுமா?
அவ்விதம் அடைய வேண்டுமா?
ஐந்து அங்குல இடைவெளியில் அமிர்தமிருந்தும்
பட்டினி கிடந்து பழகியதுண்டா?
காதலித்துப்பார்...
சின்ன சின்ன பரிசுகளில் சிலிர்க்க முடியுமே
அதற்காகவேணும்
புலன்களை வருத்தி புதுபிக்க முடியுமே
அதற்காகவேணும்
ஆண் என்ற சொல்லுக்கும் பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏராள அர்த்தங்கள் விளங்குமே
அதற்காகவேணும்
வாழ்ந்து கொண்டே சாகவும் முடியுமே
செத்துக்கொண்டே வாழவும் முடியுமே
அதற்காகவேணும்
காதலித்துப்பார்
சம்பிரதாயம் சண்டை பிடித்தாலும்
உறவுகள் உயிர் பிழிந்தாலும்
விழித்து பார்க்கையில் உன் தெருக்கள்
களவு போயிருந்தாலும்
ஒரே ஆணியில் இருவரும்
சிக்கன சிலுவையில் அறையப்பட்டாலும்
நீ நேசிக்கும் அவனோ அவளோ
உன்னை நேசிக்க மறந்தாலும்
காதலித்துப்பார்...
சொர்க்கம் நரகம் இரண்டில் ஓன்று
இங்கேயே நிச்சயம்
காதலித்துப்பார்....!!!

No comments:
Post a Comment