Pages

Wednesday, August 19, 2015

அம்மா

அம்மா



இது அனைத்து 
அம்மாக்களுக்கும் சமர்ப்பணம் .


இந்த அம்மாக்கள்
தோசைக்கல்லில் 
நிலவு வார்பவர்கள் 

அப்பா கட்டிய 
வீடாயிருந்தாலும் 
அது எமக்கு 
அம்மா வீடுதான் !

அடுப்படியே 
அம்மாவின் 
அலுவலகம் !
அன்பு மட்டுமே 
எதிர்பார்க்கும் சம்பளம் !

பிள்ளைகள் 
வெளியூரில் 
பணியிலிருக்கும் 
ஒரு வீட்டில் ,
பக்கத்துவீட்டுகுழந்தைகள் 
சாப்பிட்டுக் 
கொண்டிருக்கிறார்கள் !

அப்பா வாசம் 
வெயில் வாசம் !
அம்மா வாசம் !
நிலா வாசம் !
எமது 
சமயலரையெங்கும்
நிலா வாசம் !

எமக்கு 
காய்ச்சல் வந்தால் 
மருந்து தேவையில்லை !
அடிக்கடி வந்து 
தொட்டுப் பார்க்கும் 
அம்மாவின் கையே 
போதுமானது !

இவ்வளவு 
வயதாகியும்
புதுசட்டைக்கு 
மஞ்சள் வைத்து 
வருபவனை
கிண்டல் செய்யும் 
நண்பர்களே .....
அது 
அவன் வைத்த
மஞ்சள் அல்ல !
அவன் 
அம்மா வைத்த 
மஞ்சள் !

பிள்ளைகள் 
ஊரிலிருந்து 
கொண்டுவரும் 
பயணப்பையில் 
இந்த அம்மாக்கள் 
எதிர்பார்ப்பது 
இன்னுங்கொஞ்சம் 
அழுக்குத்துணிகளை !

மகனுக்கான 
அப்பாவின் 
கோபத்திற்கு எல்லாம் 
அம்மாவின் 
முதுகுதான் 
கிழக்கு !

இங்கே பலரது 
அகராதியில் 
வீடு என்கிற 
சொல்லுக்கு நேரே
அம்மா என்று 
உள்ளது !

அம்மா தாயே 
என்று 
முதன் முதலில் 
பிச்சை கேட்டவன் 
உளவியல்
மேதைகளுக்கெல்லாம் 
ஆசான்!

எந்தபொய்
சொல்லியும் 
அம்மாக்களை
ஏமாற்றிவிட முடியும் 
சாப்பிட்டுவிட்டேன் 
என்கிற 
அந்த ஒரு பொய்யைத்தவிர !

அத்தி  பூத்தாற்போல 
அப்பனும் 
மகனும் 
பேசி சிரித்தால் 
விழாத தூசிக்கு 
கண்கள் தேய்த்துகொண்டே 
அப்பால் நகர்கிறார்கள் 
அம்மாக்கள் 

வெளியூர் செல்லும் 
பிள்ளைகளின் 
பயணப்பைக்குள்
பிரியங்களை 
திணித்து வைப்பவர்கள் 
இந்த அம்மாக்கள் !

வீட்டுக்குள் 
அப்பாவும் 
இருந்தாலும் 
அம்மா என்றுதான் 
கதவு தட்டுகிறோம் !

அம்மாக்களை 
பற்றி 
எழுதப்பட்ட 
எல்லா 
கவிதைகளிலும் 
குறைந்தபட்சம் 
இரண்டு சொட்டுகண்ணீர்
ஈரம் உலராமல் !

அகில உலக 
அம்மக்களின் 
தேசிய முழக்கம் 
இதுதான் .....
'எம்புள்ள 
பசி தாங்காது !!!

No comments:

Post a Comment